/

என்ஆர். காங் ஆட்சியில் யார் ஊழல் புரிந்திருந்தாலும் நடவடிக்கை நிச்சயம்: முதல்வர் அறிவிப்பு

முந்தைய என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் யார் ஊழல் புரிந்திருந்தாலும் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

News image
Updated On :13 செப்டம்பர் 2016, 10:30 am

சுஜித்குமார்

முந்தைய என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் யார் ஊழல் புரிந்திருந்தாலும் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு பதவியேற்று 100 நாள்கள் ஆகின்றன. இதற்கான விழா மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான ஏ.நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட தலைவர்கள் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பேசியது:

ஊழற்ற ஆட்சியை நடத்த வேண்டும் என சோனியா காந்தியும், மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பை போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என ராகுல்காந்தியும் கூறி இருக்கிறார்கள். 

அவர்களின் வழிகாட்டுதலுடன் புதுவையில் சிறப்பான ஆட்சியை செயல்படுத்தி வருகிறோம். இது நல்லாட்சி என மக்கள் தான் கூற வேண்டும். 

கடந்த கால அரசின் ஊழல்களை மற்ற கட்சிகள் தான் பேரவையில் தெரிவித்தனர். கடந்த ஆட்சியில் ஏஎப்டி, பாப்ஸ்கோ, பிஆர்டிசி ஆகிய துறைகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் என யார் ஊழல் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்தின் நிதி பற்றாக்குறைக்கு கடந்த ஆட்சி தான் காரணம். எந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டதோ அதற்கு செலவு செய்யாமல், அத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளன. ஓட்டுக்காக வேறு சில திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். எங்கள் அரசு பொறுப்பேற்ற முதல் மாதத்திலேயே ரூ.15 கோடி விற்பனை வரி பெற்றுள்ளது. கடந்த 3 மாதங்களில் விற்பனை வரியை 120 முதல் 135 கோடி உயர்த்தி இருக்கிறோம். அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். மக்களுக்கான திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். 

நமக்குள் உள்ள கருத்து வேறுபாட்டை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். வெளியே சென்று யாரிடமும் குறைகளை கூற கூடாது. 100 நாளுக்கு பிறகு மீண்டும் தில்லி சென்று மத்திய நிதியமைச்சரை சந்தித்து புதுச்சேரியை மத்திய நிதிக் குழுவில் சேர்க்கவும், நிதி ஆதாரம், சிறப்பு மாநில அந்தஸ்து பெற தொடர்ந்து வலியுறுத்துவேன் என்றார் நாராயணசாமி..

அதைத் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று அனைத்து தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏக்கள் தீப்பாய்ந்தான், விஜயவேணி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏகேடி.ஆறுமுகம், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.